தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2020, 7:40 AM IST

ETV Bharat / city

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் 14 நிறுவனங்கள்: இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் 14 நிறுவனங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று(அக்.12) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன.

எடப்பாடி
எடப்பாடி

உலக நாடுகளை கரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதிகம் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அதுபோன்ற தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க சிறப்புக்குழுக்களை அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தக் குழுவில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு புதிய தொழில் நிறுவனத்தையும் தொடர்புகொண்டு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்புவிடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 42 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.30 ஆயிரத்து 664 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரத்து 612 பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கும் வகையில் புதிய தொழில் கொள்கையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க மேலும் 14 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறார்.

ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி நிறுவனம், அப்பலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உள்பட 14 தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.

இதில், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்பட இருக்கிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரிலும், அப்பலோ டயர்ஸ் ஒடகரத்திலும் அமைய இருக்கிறது.

மற்ற நிறுவனங்கள் சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன. இந்த 14 நிறுவனங்களும் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதால், இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details