தமிழ்நாடு

tamil nadu

பங்குச்சந்தை இளம் முதலீட்டாளரா நீங்கள்? பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!

By

Published : Oct 21, 2022, 9:25 PM IST

மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Invest
Invest

ஹைதராபாத்: சேமிப்பு மற்றும் முதலீடுகளைப் பொறுத்தவரை, நிரந்தர வைப்புத் தொகை, தங்கத்தின் மீதான முதலீடுகள் உள்ளிட்ட உறுதியான வருமானத்தைத் தருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்த இரண்டும்தான் ஏராளமான மக்களின் தேர்வாக இருந்தன.

ஆனால், மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மக்களது விருப்பங்களும் மாறிவிட்டன. தற்போது ஏராளமான முதலீட்டுத் திட்டங்கள் வந்துவிட்டன. குறிப்பாக இளைய தலைமுறையினரும் தற்போது இந்த முதலீட்டுத் திட்டங்களில் அதிக ஈடுபாட்டோடு உள்ளனர். அதேநேரம் அதிக வருவாய் வேண்டும் என்பதற்காக அவர்கள் அவசர கதியில் முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்கின்றனர்.

முதலீட்டுக்குப் பிறகும் தங்களது முதலீட்டுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வது இல்லை. இதனால் அவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. குறிப்பாக கரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பங்குச் சந்தை, டீமேட் கணக்குகள் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் இளைஞர்களின் நிதித் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் முற்றிலும் வேறாக உள்ளன. இளம் தலைமுறையினர் விரைவான நிதி சுதந்திரத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் அதிக வருமானம் தரும் திட்டங்களில் உள்ள ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் அதில் முதலீடு செய்கின்றனர். அதிக லாபத்தில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் நிதிப் பாதுகாப்பிலும் கவனம் வேண்டும்.

பெரும்பாலான இளம் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை நோக்கியே செல்கின்றனர். ஆனால், பங்குச்சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால், பங்குகள் குறையும் நேரத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். அதனால், பங்குச்சந்தையைத் தவிர மற்ற முதலீட்டுத் திட்டங்களையும் பார்க்கலாம். முதலீடு செய்யும் போது அதில் உள்ள ஆபத்து மற்றும் பலன்கள் இரண்டையும் சமநிலையில் வைக்க வேண்டும்.

முதலில் நமது நிதி இலக்குகளை முடிவு செய்து, அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். பங்குச்சந்தை, நிரந்தர வைப்புத்தொகை, தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யும் போது பன்முகப்படுத்தப்பட்ட முதலீடுகளை இலக்காகக் கொள்ள வேண்டும். நீண்ட கால திட்டங்களுடன் நிலையான ஒழுங்குமுறையுடன் முதலீடுகளைத் தொடர வேண்டும்.

இதுபோன்ற திட்டங்கள், சில அவசரக்கால சூழ்நிலைகளில் எளிதான பணப் புழக்கத்தை வழங்குகின்றனவா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதலீடுகளின் செயல்திறனைக் கண்காணித்து அவற்றிலிருந்து வரும் வருமானத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

முதலீட்டில் எதிர்பார்த்த வருமானம் கிடைத்தவுடன், அதிலிருந்து ஒரு பகுதி தொகையைத் திரும்பப் பெற வேண்டும். ஒட்டுமொத்த முதலீட்டில் ஒரு சமநிலையை அடைய வேண்டும் என்றால், இவ்வாறு செய்யலாம். முதலீடுகளைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதன் மூலம், நமது நிதி இலக்குகளை அடைவதில் சரியான பாதையில் செல்கிறோமா? என்பதை எளிதாகக் கண்டறியலாம்.

காலத்திற்கேற்ப நமது முதலீட்டுத் திட்டங்களை மாற்றியமைத்தால் மட்டுமே சிறந்த பலன்களைப் பெற முடியும். ஒரு தடவை முதலீடு செய்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்ற மனப்பான்மை இந்த காலகட்டத்தில் உதவாது.

இதையும் படிங்க: வீட்டுக்கடன் சுமையாக உள்ளதா? விடுபட சில டிப்ஸ்..!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details