தமிழ்நாடு

tamil nadu

2 மாதங்களுக்குப் பிறகு தொழிற்பேட்டை திறப்பு... தொழிலாளர்கள் இல்லை, ஆர்டர்கள் இல்லை

By

Published : May 26, 2020, 2:24 AM IST

Updated : May 26, 2020, 9:26 PM IST

சென்னை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட தொழிற்பேட்டையில் தொழிலாளர்களும் இல்லை, ஆர்டர்களும் இல்லை என தொழில் நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.

Industries reopen
Industries reopen

சென்னையை சுற்றியுள்ள 17 தொழிற்பேட்டைகள், 25 சதவிகித தொழிலாளர்களுடன் இயங்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த தொழிற்கூடங்கள் நேற்று திறந்தாலும் போதிய தொழிலாளர்கள், போதிய ஆர்டர்கள் இல்லாததால் அடுத்து வரும் நாட்களில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என
தொழில்துறையினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பேசிய சென்னை கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கனகாம்பரம்:

"கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு, எங்களது கோரிக்கையை ஏற்று சென்னையை சுற்றியுள்ள 17 தொழிற்பேட்டைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தொழிற்கூடங்கள் திறக்கப்பட்டாலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கிண்டி தொழிற்பேட்டையில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில், தற்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். அதே போல், மின்சார ரயில், பேருந்து வசதி இல்லாததால் உள்ளூரில் இருப்பவர்கள், புறநகர் பகுதியில் இருந்து வருபவர்கள் பணிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், ஒரு சில தொழிலாளர்கள் பணிக்கு வர அஞ்சுகிறார்கள். எங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில்லை. பெரு நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளது.

கிண்டி தொழிற்பேட்டையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்தனர், தற்போது இவர்களில் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்" என்று கூறினார்.

தற்பொழுது கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால், ஆட்டோமொபைல் உற்பத்தி துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெரு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை கணிசமான அளவுக்கு குறைத்துள்ளன. இதனால் அவர்களை நம்பி தொழிலில் ஈடுபட்டு வந்த ஆட்டோமொபைல் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. கரோனா பாதிப்பிற்கு மத்தியில் மீண்டும் தொழிற்சாலையை தொடங்கினாலும் ஆர்டர்கள் வராததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், மின்சாரக்கட்டணம் தொழில் நடத்தும் இடத்துக்கான வாடகை ஆகியவற்றை செலுத்த சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

Industries reopen

அதேபோல் கார் மற்றும் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம்களும், பழுதுபார்க்கும் நிறுவனங்களும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. தனிமனித இடைவெளியை கடைபிடித்து கிருமிநாசினி தெளித்து பாதுகாப்புடன் தொழிலில் ஈடுபட்டு வருவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்தின் டீலர் ஒருவர் கூறினார். தனிமனித இடைவெளி கடைபிடிப்பதால் அருகருகே இருக்கும் பழுது நீக்கும் இயந்திரங்களை பயன்படுத்தாமல் அதனால் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சென்னை மெட்ரோ சிறு மற்றும் குறு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகரன் பேசுகையில், "கரோனா வைரஸால் பாதிக்கப்படுகிற சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வசதிகள் கிடைக்க பல்வேறு சிறப்புத் திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அறிவிக்கப்படும்போது அது மகிழ்ச்சிகரமாக இருந்தது, நாங்கள் வரவேற்றோம், ஆனால், வங்கிகள் உண்மையில் எங்களுக்கு கடன் கொடுப்பதில்லை. ஏற்கனவே வாங்கப்பட்ட கடனின் அடிப்படையிலேயே தற்போது புதிய கடன்கள் வழங்கப்படுகிறது.

Industries reopen
மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருந்தாலும் புதிய கடன் திட்டம் குறித்த சுற்றறிக்கை வராததால், சிறு குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. மேலும் தற்போது நடைமுறையில் உள்ளபடி அதிக வட்டியில் கடன் வழங்க முன் வருகின்றனர்" என்றார்.பிரபல நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வழங்கும் கோர் பிளாஸ்டிக் நிறுவனத்தின் பங்குதாரர் ரெனி ஜோஸ் பேசும்போது, "பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறோம். தற்பொழுது புதிய ஆர்டர்கள் 50 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதிலிருந்து மீண்டு வர மூன்று மாதங்கள் ஆகும்" என்றார்.


இதையும் படிங்க: நாடாளுமன்ற கூட்டுத்தொடர் குறித்து வெங்கையா நாயுடு ஆலோசனை

Last Updated : May 26, 2020, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details