தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 3, 2020, 11:04 PM IST

ETV Bharat / business

மேற்கு வங்கத்தில் குறிவைக்கப்படும் 194 சிட்ஃபண்ட் நிறுவனங்கள்!

மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்னர், அம்மாநிலத்தைச் சேர்ந்த 194 சிறிய சிட் நிதி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

மத்திய அரசின் அமலாக்கத் துறை (ED), மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CBI), தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (Serious Fraud Investigation Office) ஆகியவை ஏற்கனவே மேற்கு வங்கத்தில் உள்ள சாரதா குழுமம், ரோஸ் வாலி குழுமம் உள்ளிட்ட மாபெரும் சிட் நிதி நிறுவனங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் சந்தை புலனாய்வுப் பிரிவு, மேற்கு வங்கத்தில் 2015ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து செயல்பட்டுவரும் 194 சிறு, குறு நிதி நிறுவனங்களுக்கு எதிராக தற்போது விசாரணையைத் தொடங்க உள்ளது.

இந்த 194 சிட்ஃபண்ட், மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் குறித்து நவம்பர் 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதன்முறையாக மேற்கு வங்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. அப்போது ரிசர்வ் வங்கி இந்த 194 நிறுவனங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மாநிலச் செயலகத்துக்கு அனுப்பியது. இந்த நிறுவனங்களுக்கு எதிராக மாநில அரசு ஏதேனும் முன்முயற்சி எடுத்துள்ளதா என்றும், இந்த நிறுவனங்கள் குறித்து மாநில அரசிடம் ஏதேனும் கூடுதல் தகவல்கள் உள்ளதா என்றும் மத்திய வங்கி விசாரிக்கும் என, மூத்த வங்கி அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிதித் திரட்டலின் அளவைப் பொறுத்தவரை, ரோஸ் வாலின் குழுமத்துடன் ஒப்பிடும்போது இந்த 194 நிறுவனங்கள் மிகச் சிறியவை. குறைந்தபட்சம் 2016-17 நிதியாண்டு வரை அவை அவ்வாறு இருந்தன. சரியான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இல்லாத நிலையில் ஒரு சிறிய நிறுவனம் ஒரு மாபெரும் நிறுவனமாக மாற முடியும். நவம்பர் 2016ஆம் ஆண்டு, ரிசர்வ் வங்கி இந்த 194 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மாநில அரசிடம் ஒப்படைத்தபோது, ​​மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் ஏதேனும் சாரதா அல்லது ரோஸ் வாலி போன்ற பெரிய நிதி மோசடி நிறுவனங்களாக மாறக்கூடும் என்றும் எச்சரித்தது.

இதனிடையே ”மாநில அரசு சில பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்” என ரிசர்வ் வங்கி அலுவலர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த 194 சிறிய சிட் ஃபண்ட் நிறுவனங்களில் சில ரகசியமாக செயல்பாட்டில் உள்ளதாக ரிசர்வ் வங்கிக்குத் தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இந்நிறுவனங்களின்மீது உடனடி நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளது என்றும், உண்மையில் வரவிருக்கும் நாள்களில் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை போன்ற மத்திய நிறுவனங்களின் நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தில் ஆளும் கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போது ”தேர்தல் நெருங்கும்போதெல்லாம், பாஜக மத்திய நிறுவனங்களை பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களையும் எம்எல்ஏக்களையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும். அவர்கள் இந்த முறையும் அதையே செய்வார்கள். வரும் நாள்களில் மத்திய நிறுவனங்களால் சிலர் கைது செய்யப்படலாம். ஆனால் நான் பயப்படவில்லை. அவர்களால் முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும். நான் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து தேர்தலில் போட்டியிடுவேன், திரிணாமுல்லின் வெற்றியை உறுதி செய்வேன்” என்றார்.

மாநில நுகர்வோர் விவகார அமைச்சர் சதன் பாண்டேவை அவரது கருத்துக்களுக்காக தொடர்பு கொள்ள முயற்சித்தோம். மீண்டும் மீண்டும் முயற்சித்தும், அவரது மொபைல் போன் தொடர்ந்து ஒலித்தும் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

ABOUT THE AUTHOR

...view details