தமிழ்நாடு

tamil nadu

வங்கிக்கடன் தவணைகள் மேலும் நீட்டிக்க வாய்ப்பு: ரிசர்வ் வங்கி தகவல்

By

Published : Aug 19, 2020, 9:24 PM IST

வங்கிக்கடன் தவணைகளை செலுத்துவதற்கான கால அவகாசம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விசாரணையில், கடன் தவணையையும், வட்டியையும் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது அரசினுடைய கொள்கை முடிவு என்றும் அதேவேளை மேலும் கால அவகாசம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

bank moratorium extension
bank moratorium extension

சென்னை: வங்கிக்கடன் தவணைகளை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு, பொது முடக்கம் காரணமாக கடன் தவணையையும், வட்டியையும் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆறு மாத கால அவகாசம் வழங்கியது.

ஆனால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த சிறு கடன் நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

ரிசர்வ் வங்கி உத்தரவிற்கு முரணாக கடன் வசூலிக்கும் சிறுகடன் நிறுவனங்களுக்கு எதிராக மகளிர் சுய உதவி குழுக்கள் அளிக்கும் புகார்களை பெற மாவட்ட வாரியாக தனி அலுவலர்களை நியமிக்க வேண்டுமெனவும் கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆக.19) விசாரணைக்கு வந்தது.

அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிகள் மீதான புகார்களை விசாரிக்க ஏற்கனவே மாவட்டம்தோறும் ஆம்பட்ஸ்மேன் என்ற அமைப்பின் அலுவலர்கள் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், கடன் தவணையையும், வட்டியையும் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது அரசினுடைய கொள்கை முடிவு என்றும் அதேவேளை மேலும் கால அவகாசம் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அது தொடர்பான குழு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details