தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2019, 1:06 PM IST

ETV Bharat / business

வங்கி இணைப்பால் சாதாரண மக்களுக்குப் பயன் கிடைக்குமா? - ஈடிவி பாரத் சிறப்புப் பேட்டி

நாட்டில் உள்ள பத்து பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு வங்கித்துறை நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள், வங்கி ஊழியர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

venkatachalam

வங்கி இணைப்பு தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் சி.எச்.வெங்கடாசலம், "இணைப்பு மூலம் வங்கிகள் பெரிதாகவும், உலக அளவில் போட்டிப் போடக்கூடியதாகவும் இருக்கும் என்கிறது மத்திய அரசு. கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதும் பெரும் வங்கிகள் எல்லாம் திவாலாகின. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பெரிய வங்கிகள் என்றால் அவை வலிமையானது என்று பொருளல்ல."

"தவிர மேலைநாட்டு வங்கிகள் முதலீட்டைக் கொண்டு வணிகம் செய்பவை, ஆனால் நம் நாட்டு வங்கிகள் மக்களின் வைப்புத்தொகையை வைத்தே கடன் வழங்கி சேவை செய்து வருகின்றன. எனவே மேலைநாட்டு வங்கிகளுடன் இந்திய வங்கிகளை ஒப்பிட முடியாது."

"விவசாயம், வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், சிறு குறு தொழில்கள் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்குக் கடன் வழங்குவதே நாட்டின் தற்போதையத் தேவை. இதனைச் செய்ய சமூக அக்கறை கொண்ட வங்கிகளே தேவை. பெரிய வங்கிகள் பெரு நிறுவனங்கள் பின்னால் செல்லும் என்பதால் அது சாதாரண மக்களின் தேவையைப் பற்றிச் சிந்திக்காது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கிச்சேவை மிகவும் முக்கியம். நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார பிரச்னைக்கு மத்தியில் வங்கிகளை இணைப்பதன் மூலம் வங்கிகளின் கவனம் திசை திரும்பும்."

ஈடிவி பாரத் சிறப்புப் பேட்டி

"தற்போதைய சூழலில் வங்கிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் உள்ளது. அதை முழுமையாக வசூலித்தால்தான் வங்கிகள் லாபகரமாக இயங்கும். மார்ச் மாத நிலவரப்படி, வங்கிகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மொத்த லாபம் கிடைத்துள்ளது. ஆனால் வாராக்கடனுக்கு நிதி ஒதுக்கியதால் 66 ஆயிரம் கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதான் தற்போதைய நிலை. ஆண்டு முழுவதும் சேமித்து ஈட்டிய லாபம் வாராக்கடனுக்குச் செல்கிறது. இதனைச் சரி செய்யாமல் வங்கிகளை இணைப்பதால் எந்தப் பயனும் இல்லை" என்றார்.

சிறிய வங்கிகள் அந்தந்தப் பகுதி சார்ந்த கடன் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த நிலையில், இணைப்புக்குப் பிறகு அவ்வாறு செயல்பட முடியாது என்கிறார்கள் வங்கித்துறை நிபுணர்கள். உதாரணமாகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது. தற்போது இதனைக் கொல்கத்தாவை மையமாகக் கொண்டு செயல்படும் அலஹாபாத் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த வங்கியினால் ஒரு பகுதியில் இருக்கும் மக்களின் தேவை குறித்தும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது என்றார்.


இதையும் படிக்கலாமே: இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ஜிஎஸ்டி வருவாய் குறைவு!

ABOUT THE AUTHOR

...view details