தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2020, 12:55 PM IST

ETV Bharat / business

தொடரும் அமெரிக்க நிறுவனங்களின் ஜியோ முதலீடுகள்!

டெல்லி: பேஸ்புக் நிறுவனத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் விஸ்டா நிறுவனமும்  11,367 கோடி ரூபாயை ரிலையன்ஸின் ஜியோவில் முதலீடு செய்துள்ளது.

Jio
Jio

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டு நுழைந்தது. ஜியோவின் வருகை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்தது. சுமார் ஏழு தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்தியாவில், தற்போது வெறும் நான்கு நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் ஜியோ என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்தாண்டின் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 39 விழுக்காடு வரை குறைந்தது. இருப்பினும் ஜியோவின் லாபம் மட்டும் 177.5 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்தது. சுமார் 38.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோ நிறுவனத்தில் கடந்த சில வாரங்களாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 விழுக்காடு பங்குகளை ரூ.43,574 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஏப்ரல் 22ஆம் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து அமெரிக்காவின் மற்றொரு முக்கிய நிறுவனமான சில்வர்லேக், ரூ. 5,656 கோடி ரூபாயை ஜியோவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் மற்றொரு முக்கிய நிறுவனமும், உலகின் ஐந்தாவது மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமுமான விஸ்டா, ஜியோ நிறுவனத்தின் 2.32 விழுக்காடு பங்குகளை ரூ. 11,367 கோடிக்கு வாங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சில வாரங்களிலேயே ஜியோ நிறுவனம் 60,596.37 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சர்வதேச அளவில் மிக முக்கிய மென்பொருள் நிறுவனமாக திகழும் விஸ்டா நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்வதில் மகிழ்ச்சி. எங்களின் மற்ற முதலீட்டாளர்களைப் போலவே விஸ்டாவும் அனைத்து இந்தியர்களுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்திருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய பங்குச் சந்தை உயர்வு - ஜியோவில் தொடரும் வெளிநாட்டு முதலீடு காரணமா?

ABOUT THE AUTHOR

...view details