தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரஃபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு சிக்கல்! #RafaleDeal - rafale

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ரஃபேல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. ரஃபேல் விவகாரத்தில் என்னதான் பிரச்னை? விரிவாகப் பார்க்கலாம்...

#RafaleDeal

By

Published : Feb 11, 2019, 8:28 PM IST

ஊழலை ஒழிக்க வந்த தூதுவன்!

'ஊழலற்ற ஆட்சி' என்ற ஒற்றை வார்த்தையை மோடி திரும்பத் திரும்ப பயன்படுத்தினார். அப்போது 2014 தேர்தலுக்கு நாடு தயாராகிக் கொண்டிருந்த சமயம், காங்கிரஸ் கட்சி குடும்ப ஆட்சி நடத்துவதாகவும், ஊழல் ஆட்சி நடத்துவதாகவும் பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டியது. ஊழலில் சிக்கித் தவிக்கும் நாட்டைக் காக்க வந்த தூதுவனாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் நரேந்திர மோடி. அதுவே அந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்று பிரதமராகப் பெறுப்பேற்க முக்கிய காரணமாக அமைந்தது என்றும் கூறலாம்.


ரஃபேல் ஒப்பந்தம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இதில் இந்திய ஒப்பந்ததாரராக அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 2014ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டு டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் இந்திய ஒப்பந்ததாரராக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கேள்வி

ராணுவ விமான உற்பத்தியில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் இந்திய ஒப்பந்ததாரராக தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 126 ரஃபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், அதை 36ஆகக் குறைத்து அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பும் காங்கிரஸ், இந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ரஃபேல் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்னாள் பாஜக எம்.பி.க்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையில், "ராணுவ விமான உற்பத்தியில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு உள்ளதாகவும்" பிராஷாந்த் பூஷன் தரப்பு வாதிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, ரஃபேல் ஒப்பந்தத்தில் வணிக ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என உத்தரவிட்டனர். மேலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் நீதிமன்ற வரம்பிற்குள் வராது என தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

சிஏஜி அறிக்கை சர்ச்சை

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை சிஏஜி என்று அழைக்கப்படும் மத்திய கணக்கு தணிக்கையாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாவும், இதனை சிஏஜி தணிக்கை செய்து நாடாளுன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், இது நாடாளுமன்ற பொது கணக்கு குழுவில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அப்படி ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவலைக் கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசியிருந்தார்.

மத்திய அரசு விளக்கம்

ரஃபேல் விவகாரம் தொடர்பாக அறிக்கை சிஏஜியில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் தணிக்கை குழுவின் அறிக்கை நாடாளுன்றத்திலும், பொது கணக்கு குழுவிடமும் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. தீர்ப்பில் இது தொடர்பான வரியை நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டதாகவும், இதனை மாற்றவும் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்திருந்தது.

சிஏஜி மர்மம்

இதற்கிடையே, ரஃபேல் விவகாரம் தொடர்பாக சிஏஜி அறிக்கை விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டிருந்தது. அதற்கு இது தொடர்பான தணிக்கை நடைபெற்று வருவதாகவும், அதனால் இப்போது தகவல் ஏதும் வெளியிட முடியாது என்றும் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) பதிலளித்திருந்தார்.

ரஃபேல் விவகாரத்தில் சிஏஜி அதிகாரி வேண்டுமென்றே தாமதித்து வருவதாகவும், ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசை காப்பாற்றும் வகையில் நடந்துகொள்வதாகவும் முன்னாள் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சிஏஜிக்கு கடிதம் எழுதினர்.

ஊழல் தடுப்பு விதிகளைத் தளர்த்திய அரசு

இந்த பரபரப்புகளுக்கு இடையே மத்திய அரசு மீது தற்போது மேலும் சிக்கல் அதிரித்துள்ளது. ரஃபேல் விவகாரத்தில் உள்ள முறைகேடுகள் பற்றி 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.

இது தொடர்பாக அந்த நாளிதழின் தலைவர் என்.ராம் எழுதியுள்ள கட்டுரையில் நான்கு முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

  • 136 போர் விமானங்களுக்கு இந்தியாவுக்கான பிரத்யேக அமைப்புகளை சேர்க்க முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் போட்ட நிலையில், தற்போது 36 போர் விமானங்களுக்கு அதே விலையில் இந்தியாவுக்கான பிரத்யேக அமைப்புகள் சேர்க்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
  • ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த வேளையில், இந்திய தரப்பை வலுவிழக்கச் செய்யும் வகையில் பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
  • ரஃபேல் விமானத்திற்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்காத நிலையில், அதனை பொருட்படுத்தாமல் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஊழல் தடுப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அந்த நாளிதழுக்கு கிடைத்த பிரத்யேக ஆவணங்கள் மூலம் இந்த செய்திகள் வெளியாகின.

இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நினைத்ததைவிட ரஃபேல் விவகாரம் வேகமாக வெளியே வருகிறது என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அம்பானி கொள்ளையடிக்க மோடி உதவி செய்துள்ளார் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று அறிக்கை தாக்கல்

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த சிஏஜி அறிக்கை இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பின் இது குடியரசுத் தலைவர் மற்றும் நிதியமைச்சர் அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பின் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின் பொது கணக்கு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

For All Latest Updates

TAGGED:

rafalemodi

ABOUT THE AUTHOR

...view details