இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2005ஆம் ஆண்டு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. டெலிகாம் நிறுவனங்களின் மொத்த வருவாயை கணக்கிடும்போது மொபைல்ஃபோன் விற்பனை, டிவிடெண்ட் எனப்படும் பங்கு ஆதாயம், கட்டங்களின் வாடகை உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று விதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து பாரத் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில், இறுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை செலுத்துவது சாத்தியமில்லை என்பதால் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை தயாரித்து உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது. அதன்படி அடுத்த 20 ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்ட மொத்த வருவாயை டெலிகாம் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்ற விகிதத்தில் செலுத்த வேண்டும்.
கடந்த முறை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இந்த புதிய திட்டத்தை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், "அடுத்த 20 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்" என்றும் கேள்வி எழுப்பியது.