தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 2, 2020, 3:38 PM IST

ETV Bharat / business

பட்ஜெட் 2020-21: ரியல் எஸ்டேட் வரவேற்புக்குரியதா, ஏமாற்றக்கூடியதா?

நீண்ட நிதிநிலை அறிக்கை, ஆனால் வெற்று நிதிநிலை அறிக்கை என ஒரு தரப்பினராலும், தொழில்துறையின் கோரிக்கைகளை ஓரளவுக்கு நிறைவேற்றிய நிதிநிலை அறிக்கை என மற்றொரு தரப்பாலும் கூறப்படுகிறது. இருப்பினும், இது ஒரு கலைவையான மத்திய நிதிநிலை அறிக்கையாகவே அமைந்திருக்கிறது.

Real Estate Sector on Budget
Real Estate Sector on Budget

ரியல் எஸ்டேட் (மனை வணிகம்) துறைக்கு இந்த மத்திய நிதிநிலை அறிக்கை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக 'கிராடாய்' என்று அழைக்கப்படும் இந்திய மனை வணிக நிறுவனங்கள் சங்கத் தமிழ்நாடு தலைவர் ஸ்ரீதரன் நமது ஈடிவி பாரத்திடம் பேசினார்.

வரவேற்பு

அப்போது அவர் கூறுகையில், "மலிவு விலை வீடுகள் வாங்க 1.5 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டுவந்தவரிச் சலுகை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மலிவு விலை வீட்டுக் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் வரிச் சலுகைகளும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. பெரு நிறுவன வரியை மத்திய அரசு குறைத்துள்ளதும் மனை வணிக நிறுவனங்களுக்கு பயனளிக்கும். இவை வரவேற்புக்குரியவை.

ஏமாற்றம்

2ஆவது வீடு வாங்குபவர்களுக்கு வரிச்சலுகையை அரசு வழங்கும் என எதிர்பார்த்தோம். இதனால் வீட்டுமனை விற்பனை உடனடியாக அதிகரிக்கும், நாட்டின் பல பகுதிளில் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் உள்ள வீடுகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. தொடர்ந்து, இது குறித்து அரசிடம் எங்கள் கோரிக்கையைவைப்போம்" என்றார்.

திருப்திப்படுத்தியதா மத்திய பட்ஜெட் 2020-21

வரி விலக்கில் மாற்றம்

தற்போது வருமான வரியை எளிமைப்படுத்தும்விதமாக, அனைத்து வரி விலக்குகளையும் தேவையில்லை என நினைப்பவர்கள் குறைந்த அளவுக்கு வரி செலுத்தலாம் என்ற புதிய நடைமுறையை தனது மத்திய நிதிநிலை அறிக்கை உரையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பலரும் வரியை குறைப்பதற்காகவே வீடு, வாகனங்களை வாங்கிவந்த நிலையில் இந்தப் புதிய அறிவிப்பால் அது பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய ஸ்ரீதரன், "இதனால் ஏற்படும் பாதிப்பை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். பலரும் வரியை குறைக்கலாம் என்ற நோக்கில்தான் வீட்டுக்கடன் பெற்றுவந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மக்கள் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வுசெய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால், இது எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். வீடு என்பது அத்தியாவசியமானது என்பதால் வீடுகளுக்கான தேவை தொடர்ந்து உயரும் என்றாலும் இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் பெரும் தூண்டுதலாக இருந்தன.

வீடுகள் விற்பனையில் தேக்கம்?

புதிய வாய்ப்புகள்

தற்போது வீடுகள் விற்பனையாகாமல் தேக்கமடையவில்லை. புதிய வீட்டுவசதி திட்டங்களே (Project) விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. தற்போது சென்னையில் பல அலுவலகங்கள் இணைந்து செயல்படும் கோ-வொர்க்கிங் திட்டங்கள், பலர் இணைந்து வசிக்கும் கோ-லிவ்விங் திட்டங்கள் அதிகம் விரும்பப்படுகிறது. அதேபோல் தகவல் தொழில்நுட்ப நிறுவன அலுவலகங்களுக்கும் அதிக தேவை உள்ளது. மாணவர்களுக்கான வீடுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெறும் வீட்டு வசதி மட்டுமில்லாமல் இதுபோன்ற திட்டங்களும் அதிகரித்துள்ளன.

மாநில அரசு

முத்திரை வரி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது. இதனைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துவருகிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாட்டில் வீட்டுமனைகள் விற்பனை நிலை என்ன?

அதேபோல், ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெறுவது தொடர்பாகவும் அரசிடம் கோரிக்கைவைத்துவருகிறோம். இது தொடர்பாக அரசும் ஒரு குழு அமைத்து இதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழ்நாட்டில் மனை வணிகத்துறை எழுச்சிபெறும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:பட்ஜெட்டின் தாக்கத்தை உணர திங்கள் வரை காத்திருங்கள்: நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details