கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் மியான்மர் தலைநகர் யாங்கோனில் 127 மில்லியன் டாலர் மதிப்புள்ள துறைமுகத்தை கட்டமைக்க,அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் விருப்பம் தெரிவித்தது. மியான்மர் பொருளாதார கழகம் (Myanmar Economic Corporation) குத்தகைக்கு விட்ட நிலத்தில்தான் இந்த துறைமுகம் அமைகிறது. மியான்மர் பொருளாதார கழகம், மியான்மர் ராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மியான்மர் ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, பங்குச் சந்தை குறியீடான எஸ்&பி (S&P Index) இண்டக்ஸில் இருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனமும், சிறப்பு பொருளாதார மண்டலமும் அமெரிக்காவால் நீக்கப்பட்டன. ஏற்கனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், இத்திட்டம் அமெரிக்க பொருளாதார தடைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், மொத்தமாக மியான்மர் திட்டத்தை கைவிடக்கூடும் என அதானி போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.