கோவை, துடியலூரை அடுத்த ராக்கிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கெளதம் - ஜோதி குமாரி தம்பதியினர். இவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள். நிறை மாத கர்ப்பிணியான ஜோதி குமாரி, கருவுற்றது முதலே துடியலூரில் உள்ள 24 மணி நேர பிரசவம் பார்க்கும் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு நேற்று இரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஆட்டோவில் துடியலூர் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்திற்கு அவரை கூட்டிச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள் அவருக்கு பிரசவம் பார்க்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை தாளியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம் என்று கௌதம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்த நிலையில், வழியிலேயே ஜோதி குமாரியின் பனிக்குடம் உடைந்து, ஆட்டோவிலேயே குழந்தை பிறந்துள்ளது.