தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2020, 12:25 AM IST

Updated : Jul 14, 2020, 12:40 AM IST

ETV Bharat / briefs

தருமபுரி அரூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதி!

தருமபுரி: அரூர் கடை வீதியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் , சம்பந்தப்பட்ட கடைவீதி பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dharmapuri district news

தருமபுரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் தொற்று இல்லாத நிலையில், ஜூன், ஜூலை மாதம் முதல் தொற்று வேகமாக பரவி வருகிறது.

தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும், தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 250 ஜை தாண்டியது. இந்தநிலையில், தருமபுரி மாவட்டம், அரூர் கடை வீதியைச் சார்ந்த வணிகர் ஒருவர் குடும்பத்துடன் தனது உறவினரின் துக்க நிகழ்வுக்குச் சென்று சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து தருமபுரி செட்டிகரையில் உள்ள தற்காலிக கரோனா பரிசோதனை மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

நேற்று (ஜூலை.12) மாலை அவருக்கும், அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், தனது மனைவி, குழந்தைகளுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

வணிகரான அவருக்குத் தொற்று ஏற்பட்டதால், அரூர் கடை வீதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து மூடப்பட்டுள்ளது.

கடை வீதி பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, அவரது தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண், கடையில் வேலை செய்த தொழிலாளர்கள் என எட்டு பேரை வரவழைத்து, ஏழு நாள்கள் வீட்டிலேயே தனிமையில், யாருடனும் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என துணை ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.

வணிகருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை அடையாளம் கண்டு, அனைவரையும் ஐந்து நாள்களுக்குப் பிறகு கரோனா தொற்று பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்க சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அரூர் கடை வீதியில் அதிகப்படியான வணிகர்கள், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் இருப்பதால், வெளியூரில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்குச் சென்று வரும் நிலையுள்ளது.

இதனால் வியாபாரிகள் மூலம் மற்றவர்களுக்குத் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், அடிக்கடி வெளியூர் சென்று வரும் வியாபாரிகளுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ள துணை ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.

அரூர் பகுதியில், எப்போதும் பரபரப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த கடை வீதி பகுதியில், வணிகர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டதால், கடைவீதியில் உள்ள வணிகர்கள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Last Updated : Jul 14, 2020, 12:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details