தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 10, 2020, 12:58 AM IST

ETV Bharat / briefs

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாகப் பிரித்த இத்தாலி மருத்துவர்கள்

ரோம் : மூளை நரம்பு மண்டலங்களில் 18 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்து இத்தாலி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்த இத்தாலி மருத்துவர்கள்!
ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்த இத்தாலி மருத்துவர்கள்!

மத்திய ஆப்பிரிக்க குடியரசான பாங்குவைச் சேர்ந்த பெண்மணிக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டில் இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்தன. எர்வினா, ப்ரீஃபினா என அழைக்கப்படும் இந்த ஒட்டிப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு, மண்டை ஓடு மற்றும் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பொதுவாக இருந்தது மருத்துவ சோதனைகளில் பின்னர் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்த குழந்தைகளை நேரில் சந்தித்து இத்தாலியின் பாம்பினோ கெசு மருத்துவமனையின் தலைவர், குழந்தைகளின் தாயிடம் மருத்துவத்திற்கான உதவிகளை தாம் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டு காலமாக பாம்பினோ கெசு (பேபி ஜீசஸ்) குழந்தை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர், மயக்க மருந்து வல்லுநர், நரம்பியல் மருத்துவர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர், இயன்முறை மருத்துவர் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு அறுவை சிகிச்சைக்கு குழந்தைகளின் உடல் தகுதியை அடைய வைத்திருந்தனர்.

இதனையடுத்து, ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு 18 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற தொடர் அறுவை சிகிச்சையை அடுத்து தனித்தனியாக பிரிக்கப்பட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், " இத்தாலியில் மட்டுமல்ல உலக அளவில் இந்த அறுவைச் சிகிச்சை தான் முதன்முதலில் நடந்து, வெற்றிப் பெற்ற முதல் அறுவை சிகிச்சையாகும்.

இதுபோன்ற ஒரு நிகழ்வு மருத்துவ வரலாற்றில் எங்கும் நடைபெற்றதில்லை. எந்த மருத்துவ நூலிலும் மேற்கோள் காட்டப்பட்டதில்லை. இந்த இரட்டைக் குழந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சையின் கீழ் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

ஒரு குழந்தையின் மண்டை ஓடு மற்றொரு குழந்தையின் மண்டை ஓட்டோடு இணைந்திருந்தது. அரிதான மற்றும் மிகவும் சிக்கலான வடிவிலான கிரானியல் மற்றும் பெருமூளை இணைவு அவர்களிடம் இருந்தன.

இரட்டையர்களின் மண்டை ஓட்டின் பின்புறம் மற்றும் சிரை அமைப்பு எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. முதர் இரண்டு சுயாதீன சிரை அமைப்புகளை படிப்படியாக புனரமைக்க மூன்று மிக நுட்பமான செயல்பாடுகள் தேவைப்பட்டன. அவை மூன்று அறுவை சிகிச்சைகளாக நடைபெற்றன.

முதல்கட்டமாக, கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று இருவரின் பகிரப்பட்ட மண்டை ஓட்டின் எலும்புகள் பிரிக்கப்பட்டன. இரண்டாவது அறுவைசிகிச்சை இரண்டு மூளைகளை உள்ளடக்கிய மென்படலத்தை புனரமைத்து, புதிய மண்டை ஓடுகளுக்கு மேல் தோல் புறணியை மீண்டும் உருவாக்கியது.

ஒரு மாதம் மிக தீவிரமான பரிசோதனை, கண்காணிப்பில் இருந்த இரு குழந்தைகளின் இறுதி அறுவை சிகிச்சை, 18 மணிநேரம் 30 மருத்துவர்கள், 20 செவிலியர்களின் கடும் முயற்சியால் வெற்றிகரமாக நிறைவுற்றது. தற்போது இரட்டையர்கள் மிகுந்த நலமுடன் உள்ளனர்.

நுண்ணிய அறுவை சிகிச்சை காரணமாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதால், சிறுமிகள் சில மாதங்களுக்கு பாதுகாப்பிற்காக தலைக்கவசம் அணிய வேண்டியிருக்கும்.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சோதனையில் அவர்களின் மூளைகள் தனித்தே செயல்படுவதும், அவர்கள் சராசரி குழந்தைகள் போல இயல்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமில் இயங்கிவரும் இந்த பாம்பினோ கெசு மருத்துவமனையின் வரலாற்றில் இணைந்து பிறந்த இரட்டையர்களுக்கு அவர்கள் செய்த நான்காவது அறுவை சிகிச்சை இது என அறிய முடிகிறது.

மண்டையோடு இணைந்த இரட்டையர்கள் மிகவும் அரிதானவை. ஒவ்வொரு 2.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தை பிறப்புகளில் இப்படியான மண்டை ஓட்டு அமைப்புடன் ஒரேயொரு குழந்தை மட்டுமே பிறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details