கரோனா கால கட்டத்தில் மின்கட்டணம் அதிகமாக கணக்கீடு செய்துள்ளதாக எழுப்பப்பட்ட புகாருக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “கரோனா காலத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மின்கணக்கீடு செய்ததில் நான்கு மாதத்திற்கான மொத்த நுகர்வின் அடிப்படையில் அதிகப்படியாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சில ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டன.
மின் கட்டணம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதன் விசாரணை முடிந்து இன்று (15.7.2020) உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நான்கு மாத காலத்திற்கான மின் நுகர்வை இரண்டு மாதங்களுக்கான (bi- monthly) வீதப்பட்டி அடிப்படையில் சமமாக பிரித்து கணக்கீடு செய்தது நியாயமானது மற்றும் முறையானது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு செய்ததால்தான் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான கணக்கீட்டிலும், தனித்தனியே 100 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கணக்கீடு செய்தது விதிகளுக்கு உட்பட்டதே என்றும் அது அவர்களின் வெளிப்படைத் தன்மையை காட்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கீடு குறித்து பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்கும் வகையில் கீழ்க்கண்ட விளக்கங்கள் மீண்டும் அளிக்கப்படுகிறது: நான்கு மாத காலத்திற்கான மின்நுகர்வு இரண்டு மாதங்களுக்கான (bi- monthly) வீதப்பட்டி அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது.