சென்னை மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர், தான் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும், தனது 80 வயதான தாய் வசந்தா சுப்ரமணியம் சென்னை, தி.நகர், நீலகண்ட மேத்தா தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கரோனா காரணமாக அவரை அழைத்து வர இயலவில்லை, எனவே தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், சென்னை விமான நிலையம் வரை அழைத்துச் செல்ல உதவி தேவை என கூறியிருந்தார்.
உடனே, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர், காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை பெண் காவலர் மகாலஷ்மி என்பவரிடம் விவரத்தை கூறி அந்த மூதாட்டிக்கு உதவுமாறு கூறினார். இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற காவலர் மகாலஷ்மி, மூதாட்டி வசந்தா சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து விவரங்களை கூறி தங்களது மகளை பார்க்க ஹைதராபாத்திற்கு ஜூலை 1ஆம் தேதி செல்ல இருப்பதாக கூறினார். அதன்பேரில், ஜூலை 1 அன்று பெண் காவலர் மகாலஷ்மி, வசந்தாவின் வீட்டிற்கு சென்று அவரது உடைமைகள் மற்றும் பொருள்களை எடுத்துக் கொண்டு தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த தனியார் கார் மூலம் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விமானத்தில் அனுப்பி வைத்தார்.