தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2020, 2:07 PM IST

ETV Bharat / briefs

ஊரடங்கால் வெறிச்சோடிய தூங்கா நகரம்!

மதுரை: கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மதுரையில் இன்றுமுதல் ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ஊரடங்கால் வெறிச்சோடிய மதுரை மாநகர்!
ஊரடங்கால் வெறிச்சோடிய மதுரை மாநகர்!

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனையடுத்து, இன்றுமுதல் (ஜூன்24) ஜூன் 30ஆம் தேதிவரை மீண்டும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அரசின் உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகள், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், பரவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

காய்கறி, மளிகை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை விதிகளுக்கு உள்பட்டு செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

பால், மருந்துப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய பொருள்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நடந்துசென்று வாங்கலாம்.

மதுரை மாநகருக்குள் பேருந்துகள் இயக்கப்பட அனுமதியில்லை என்பதால், பிற மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்படும். ஊரடங்கு காலங்களில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முழுமையான ஊரடங்கு காரணமாக இன்றுகாலை முதல் மதுரை நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details