தமிழ்நாடு

tamil nadu

போலி இ-பாஸ் வழக்கு: மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமின் மறுப்பு

By

Published : Jul 9, 2020, 3:26 PM IST

சென்னை: சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்ததாக கைதுசெய்யப்பட்ட இரண்டு பேரின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி இ-பாஸ் வழக்கு: ஜாமீன் மறுப்பு
போலி இ-பாஸ் வழக்கு: ஜாமீன் மறுப்பு

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பாஸ் வழங்கும் முறையை தமிழ்நாடு அரசு பின்பற்றிவருகிறது. திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளுக்கும், அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்கும் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் ஒரு கும்பல் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்குவதாகக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், சென்னை பேசின் பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிவந்த உதயக்குமார், கோபி, மனோஜ்குமார், ஓட்டுநர் வினோத்குமார் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

இவர்களில் குமரன், மனோஜ்குமார் ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயக்குமார், ஓட்டுநர் வினோத்குமார் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர். செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், போலி இ-பாஸ் வழங்கியதில் மனுதாரர்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று வாதிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர்களில் ஒருவரான ஓட்டுநர் வினோத்குமார், மற்றொரு மனுதாரரான இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயக்குமார் மூலம் சட்டத்துக்குப் புறம்பாக இபாஸ் பெற்று பயன் அடைந்துள்ளார்.

அரசு அலுவலர்கள், டிராவல் ஏஜென்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து அரசு ஆவணங்களைப் பயன்படுத்தி ரகசியமாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. எனவே, மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது” என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் இரண்டு பேரின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details