உலகளாவிய அச்சுறுத்தலான கோவிட்-19 இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை நெருங்கிக்கொண்டிருக்கும் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முழுமையான ஊடங்கும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரவும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஊரடங்கால் வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என சமூகத்தின் பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், சாலையோர நடைபாதை வியாபாரிகள் கரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.