புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு, காதல் தோல்வி காரணமா என காவல் துறையினர் பெண்ணின் உறவினர், பொது மக்கள் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர் .
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலுப்பூரைச் சேர்ந்தவர், அந்த 17 வயது இளம்பெண். இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டு உத்திரத்தில் சேலையால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளிக்காமல் உறவினர்கள் சிலர் இளம்பெண்ணின் உடலை எரித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முரளிசங்கர், இலுப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரினைத் தொடர்ந்து, அப்பெண்ணின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடியில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.