இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (நவ.16) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய அச்சுறுத்தலான கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள். வரும் காலங்களில், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 10 லட்சம் கரோனா கண்டறிதல் சோதனைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளன. சோதனை கண்டறியும் திறனும் தொழில்நுட்பமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கோவிட்-19 பாதிப்பால் நாடு முழுவதும் 88 லட்சத்து 48 ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 82 லட்சத்து 51 ஆயிரத்து 378 பேர் குணமடைந்தும் உள்ளனர். நாட்டின் பல்வேறு மருந்துவமனைகளில் நான்கு லட்சத்து 64 ஆயிரத்து 908 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 93.27 விழுக்காடு பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். அதேபோல், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 45 விழுக்காட்டிலிருந்த சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 20 விழுக்காடாக சரிவு கண்டுள்ளது.