இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”தமிழ்நாடு முழுவதும் சவுடு, உவரி, வண்டல் மண் அள்ள அனுமதி வாங்கி, சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. அதில் முக்கியமாக வைகை, காவிரி, பாலாறு ஆகிய ஆறுகளில் அதிகப்படியாக சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்குகின்றன. இதுதொடர்பாக அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் வறட்சி மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோத மணல் கொள்கை அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.