தமிழ்நாடு

tamil nadu

வேடந்தாங்கல் வதந்திகள்... விளக்கமளித்த வனத்துறை!

By

Published : Jun 9, 2020, 11:52 PM IST

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் இடம் குறைக்கப்படுவதாக ஊடகங்களில் வந்த செய்திகள், உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு வனத்துறை விளக்கமளித்துள்ளது.

forest department explained the rumors about vedanthangal land issue
forest department explained the rumors about vedanthangal land issue

இதுகுறித்த விளக்கமளித்த தமிழ்நாடு வனத்துறை, '73.06 ஏக்கர் மொத்தப் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரி பொதுப்பணித்துறையின் பாசன ஏரிகளில் ஒன்று.

இந்த ஏரி கடந்த 1998ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி தமிழ்நாடு அரசின் அரசாணை எண்.199இன்படி (வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி) 'வன உயிரின சரணாலயமாக' அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பில், ஏரியைச் சுற்றியுள்ள 5 கி.மீ., நிலப்பரப்பில் உள்ள தனியார் பட்டா நிலம், வருவாய் நிலங்களும் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதில் வன நிலங்கள் ஏதும் இல்லை. மத்திய அரசு அனைத்து சரணாலயங்களையும் மையப்பகுதி (Core Zone), இடை நிலைப்பகுதி (Buffer Zone), சுற்றுச்சூழல் பகுதி (Eco-Sensitive Zone) ஆக வகைப்பாடு செய்யும்படி அறிவுறுத்தியது. அதற்கானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி வேடந்தாங்கல் சரணாலய ஏரியைச் சுற்றியுள்ள 5 கி.மீ., நிலப்பரப்புகள், 0-1 கி.மீ., தூரம் மையப்பகுதி எனவும்; 1-3 கி.மீ., தூரம் இடை நிலைப்பகுதியாகவும், 3-5 கி.மீ., சுற்றுச்சூழல் பகுதி எனவும் வகைப்பாடு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை 5 கி.மீ., சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகின்றது என்பது மிகவும் தவறான கருத்து. மேற்கூறிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட அரசாணையில் உள்ள இடங்கள் எதுவும் வனக்காப்பு நிலங்கள் இல்லை. பொதுப்பணித்துறை பாசன ஏரி பரப்பளவான 73.06 ஏக்கரைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பரப்பளவும் சுமார் 28 கிராமங்களைக் கொண்ட வருவாய்த்துறை மற்றும் தனியார் நிலப்பரப்பாகும்.

இந்த நிலப்பரப்பில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் வசித்து வருகின்றனர். மேற்கூறிய 5 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் உள்ள நிலப்பரப்பில் வன நிலங்களோ, வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களோ, எதுவும் கிடையாது. 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவில் உள்ள பொதுமக்கள் 1998ஆம் ஆண்டுக்கு முன்பாகவே தங்களுடைய வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் பல்வேறு சிறு தொழில்கள் மற்றும் தங்கள் சொந்த இடங்களில் வாழ்வதற்கான சிறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி இந்திய அளவில் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சரணாலயப் பகுதிகளை மேற்கூறிய மூன்று வகைகளில் வகைப்பாடு செய்து (மேம்பட்ட நிர்வாகம் செய்ய) அறிக்கை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பகுதியில், 5 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பினை முறைப்படுத்தி சரணாலய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கையில் உள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியில், நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்த எவ்வித குறைவும் இல்லாமல், அதே 5 கிலோ மீட்டர் சுற்றளவை முறைப்படுத்தும் நடவடிக்கைகளே நடைபெறுகின்றன. இது சரணாலய நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் ஆகும்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் போன்றவை பாதிக்காத வண்ணம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சரணாலயத்தின் பாதுகாப்பையும் இந்த நடவடிக்கைகள் வலுவாக்கும்.

இந்த நடவடிக்கைகளினால் பொது மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள், விவசாயம் போன்ற செயல்கள் எதையும் பாதிக்காத வகையில், வகைப்பாகுபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பறவைகள் சரணாலயங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்த்தங்கால், சக்கரக்கோட்டை, கஞ்சிரங்குளம், சித்தரங்குடி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர், உதயமார்த்தாண்டபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிகிளி ஆகியவற்றில் சரணாலயத்தை மேலாண்மை செய்வதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பகுதியையும் அதைச்சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பகுதிகளையும் எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கோ அல்லது தொழிற்சாலை அமைக்கவோ, வர்த்தக நிறுவனத்திற்கோ உதவும் பொருட்டு மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது' எனத் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details