தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 6, 2020, 2:25 AM IST

ETV Bharat / briefs

எட்டு வழிச் சாலைக்கு காட்டும் அக்கறையை, கரோனாவிற்கு காட்டுகள்- விவசாயிகள்!

சேலம்: எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பூலாவரி, குள்ளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்புக் கொடி ஏந்தி போராடும் விவசாயிகள்
கருப்புக் கொடி ஏந்தி போராடும் விவசாயிகள்

சேலம் - சென்னை இடையே 278 கிலோமீட்டர் தொலைவிற்கு எட்டு வழிச் சாலை என்கிற பசுமைவழிச் சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மேலும் இத்திட்டத்திற்கு எதிராகவும் , திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருப்பதால் இத்திட்டத்தை ரத்து செய்வதோடு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது..

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த ஒராண்டாக நிலுவையில் இருந்த நிலையில், மத்திய அரசு சார்பில் நேற்று திடீரென உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டம் முடங்கி கிடப்பதாகவும் தெரிவித்து மேல்முறையீடு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுறு சேலம் மாவட்டம் பூலாவரி, குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பாதிப்பு காரணமாக மக்கள் உயிரிழப்பு அதிகரித்து, கோடிக்கணக்கான மக்கள் பசியும் பட்டினியோடு வாழ்ந்துவரும் நிலையில், சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் எனவும், இ வழக்கை விரைந்து முடிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பத்தாயிரம் கோடி ரூபாயை கரோனா தடுப்பு பணிக்கு செலவிட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details