திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிராமம், குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி (55). இவர் தாராபுரம் நகரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் 2012ஆம் ஆண்டு நீண்டகால விவசாய கடன் பெற்றிருந்தார். பெற்ற கடனை சரியாக செலுத்திய நிலையில், 2017ஆம் ஆண்டு 1.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். அவரது பூமியை மேம்படுத்தி விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார்.
மூன்று இடங்களில் போர்வெல் போட்டும் தண்ணீர் பற்றாக்குறை, தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை முழுமையாக செலுத்த இயலவில்லை. சிரமத்திற்கு மத்தியிலும் வங்கிக்கு தவணைகளை அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தவணை தொகையையும், அபராத வட்டியையும் உடனே செலுத்த வேண்டுமென ஆக்ஸிஸ் வங்கி அலுவலர்கள்நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கரோனா காலத்தில் போதுமான வருமானம் இல்லாததால் அவரால் தொடர்ச்சியாக தவணையை செலுத்த இயலவில்லை, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்த காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 வாரமாக வங்கிக் கிளை மேலாளர் மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் அவரது தோட்டத்திற்குச் சென்று தொடர்ந்து மிரட்டியுள்ளனர், கேவலமாகவும், தரக்குறைவாகவும் திட்டியுள்ளார்கள்.