சென்னையில் மருத்துவ முகாம்கள் நடத்த இருப்பதாக மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சென்னை: கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாள்தோறும் 680 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் வார்டுக்கு இரண்டு மருத்துவ முகாம்கள் என மொத்தம் 400 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும் மாநகர ஆரம்ப சுகாதார மையம் மருத்துவர்கள் மூலம் 140 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 540 மருத்துவ முகாம்கள் கோட்ட நல அலுவலர்கள் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்களில் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை புறநோயாளிகள் பிரிவிற்கு வருகின்றவர்களுக்கு சிறு சிறு உடல் உபாதைகளுக்காக சிகிச்சை, அனைத்து வகை காய்ச்சலுக்காக சிகிச்சை, கர்ப்ப கால பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுதல், எச்ஐவி பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பார்த்தல், ஆன்லைன் மூலம் கர்ப்பம் பதிவு செய்தல் ஆர்சிஎச்ஐடி நம்பர் வழங்குதல், கர்ப்ப கால முன் சிகிச்சை, பின் சிகிச்சை அளித்தல், சர்க்கரை வியாதி கண்டறிதல், தொடர் சிகிச்சை மற்றும் உரிய ஆலோசனை அளித்தல் மற்றும் ஆய்வுக்கூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.
புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களையும் பரிசோதித்து அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும். இல்லை என்றால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். அதேபோல் இந்த வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சி கோட்டத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என நாள்தோறும் 400 இடங்களிலும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உள்பட்ட கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிக்கு மருத்துவ அலுவலர் குழுவோடு சென்று மருத்துவ முகாம் நடத்துவது மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை என 680 மருத்துவ முகாம்கள் நடைபெறும்” என்றார்.