சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரையும் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதில் அவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் இறந்தவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது காவல் துறையை கண்டித்தும், காவல்நிலைய மரணங்கள் நடக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், மரணத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.