தமிழ்நாடு

tamil nadu

'நிஜ ஹீரோக்கள் இவர்கள்தான்' - கரோனாவிலிருந்து மீண்டவரின் நெகிழ்ச்சி கடிதம்!

By

Published : Jul 4, 2020, 12:41 PM IST

தர்மபுரி: உண்மையான ஹீரோக்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள்தான் என்று கரோனாவிலிருந்து மீண்ட தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

கரோனா சிகிச்சை குறித்து தேர்வுத்துறை இணை இயக்குனர் கடிதம் சமூக வலைதளங்களில் வைரல்
கரோனா சிகிச்சை குறித்து தேர்வுத்துறை இணை இயக்குனர் கடிதம் சமூக வலைதளங்களில் வைரல்

சென்னை தேர்வுத் துறை இயக்குநராகப் பணியாற்றிவருபவர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்குமார். கடந்த ஜுன் மாதம் ஆறாம் தேதி இவருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மறுநாள் காலை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

தொடர் சிகிச்சைக்குப் பிறகு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். ஜூலை மாதம் ஒன்றாம் தேதி மருத்துவர் தினத்தில் தனக்கு மருத்துவம் வழங்கிய மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை எழுதினார்.

அவர் எழுதிய கடிதத்தில், “கடந்த மாதம் ஆறாம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். ஏழாம் தேதி காலை வந்த பரிசோதனை முடிவில் எனக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். செவிலியர் தங்கும் அறைகள் கரோனா சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டு, அங்கு எனக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. நான் சிகிச்சை பெற்ற அறை நல்ல காற்றோட்டமாகாவும் சுத்தமாகவும் இருந்தது.

ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை போன்றவை முறையாகச் செய்யப்பட்டு, அதற்கான முடிவுகளை மருத்துவர்கள் தெரிவித்தனர். எனக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் தரமான சிகிச்சை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்கி, எனக்கு சிகிச்சையளித்த 7 மருத்துவர்கள் நட்பு ரீதியாக என்னைப் பார்த்துக்கொண்டனர்.

சிகிச்சையிலிருந்தபோது தினமும் காய்கறி உணவுகள், பழங்கள், முட்டை, சுண்டல், தேநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வழங்கினர். எனக்கு பிடித்த பிரியாணியை ஞாயிற்றுக்கிழமை வழங்கினர். தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி தினந்தோறும் தொலைபேசி வழியாக உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்கடிதத்தில் தனக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உண்மையான ஹீரோக்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details