சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்ற நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் சுற்றில் முதல் நிலை வீராங்கனையும் இந்திய நட்சத்திர வீராங்கனையுமான அபூர்வி சந்தேலா 251 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்ததால், அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இரண்டாவது தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா!
முனிச் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் சுற்றில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
அவருக்கு அடுத்தப்படியாக 250.8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்த சீன வீராங்கனை லுயாவ் வாங்கிற்கு வெள்ளிப்பதக்கமும், 229.4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்த மற்றொரு சீன வீராங்கனை ஹாங் ஜூவிற்கு வெண்கலப்பதக்கமும் கிடைத்தது. இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய நட்சத்திரங்களான இளவேனில் வாலறிவன் நான்காவது இடத்தையும், அஞ்சும் முட்கில் 11ஆவது இடத்தையும் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.
இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், அபூர்வி சந்தேலா நடப்பாண்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் அவர் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.