தமிழ்நாடு

tamil nadu

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் இறந்த விவகாரம்: உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!

By

Published : Jul 8, 2020, 9:26 PM IST

மதுரை : சிறை சித்ரவதையால் உயிரிழந்த மகேந்திரனின் தாயார் தொடுத்துள்ள மனு தொடர்பில் தமிழ்நாடு உள்துறைச் செயலரும், காவல்துறை தலைவரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

"சாத்தான்" குள காவலர்களால் உயிரிழந்த மகனுக்காக நீதி கோரும் தாய்!
"சாத்தான்" குள காவலர்களால் உயிரிழந்த மகனுக்காக நீதி கோரும் தாய்!

சாத்தான்குளம் காவல் நிலைய அலுவலர்களின் சித்ரவதையே, தனது மகனின் மரணத்திற்கு காரணமென தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை நேற்று (ஜூலை7) தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது மூத்த மகன் பெயர் துரை, இரண்டாவது மகன் மகேந்திரன், மகள் பெயர் சந்தானம். எனது மகன்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம், பாப்பான்குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்ம கும்பல் ஒன்றால் கடந்த மே 18ஆம் தேதியன்று கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கொலையான ஜெயக்குமாரின் தம்பி ஆழிகுமார் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் மனு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த மே 22 ஆம் தேதி அன்று சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உட்பட சில காவல் துறையினர் எனது மூத்த மகன் துரையை தேடி எனது வீட்டிற்கு வந்தனர்.

ஜெயக்குமாரின் கொலை சம்பந்தமாக துரை மீது சந்தேகம் உள்ளது எனக்கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல வேண்டும் என்றனர். இத்தனைக்கும் கொலை சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பைகுளம், பாப்பான் குளத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பின்னர் பாப்பான் குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டுக்கு கடந்த 23ஆம் தேதி அன்று சென்றனர். அப்போது எனது மூத்த மகன் துரை வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த இரண்டாவது மகன் மகேந்திரனை காவல்துறையினர் வீட்டிற்கு வெளியே இழுத்து சென்று, சட்ட விரோதமாக அவரை தாக்கி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்டோர் மகேந்திரனை தலை முதல் கால் வரை உடல் முழுவதும் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் மே 24 ஆம் தேதி அன்று இரவு மகேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அப்போது, காவல்துறையினர் மகேந்திரனைப் பார்த்து தற்போது காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து உயர் அலுவலர்களிடம் எவ்வித புகாரும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளனர்.

காவல்துறையினர் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாள்களுக்குப் பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர் சிகிச்சைப் பெற்றுவந்தவர் ஜூன் 13 தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

பின்னர் அப்பகுதி மக்கள் ஆதரவுடன் எனது மகன் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பந்தமாக, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று புகார் அளித்தோம். ஆனால், குற்றம் செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பந்தமாக தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.

அதைபோல, எனது இளைய மகன் மகேந்திரன் உயிரிழப்பு சம்பந்தமாகவும் சட்ட விரோதமாக காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரை தாக்கியது தொடர்பாகவும் விசாரணை செய்ய உயர் அலுவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பனின் அமர்வுக்கு முன்பாக இன்று (ஜூலை8) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத்தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர்,"இது குறித்த விரிவான பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும்" என கோரினார்.

இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக, தமிழ்நாடு உள்துறைச் செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இது போல பல மனித உரிமை மீறல்களும், காவல் நிலைய படுகொலைகளும் நடந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details