தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குற்றாலத்தில் கடைகளின் வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது: விக்கிரமராஜா - தூத்துக்குடியில் ஏ.எம்விக்கிரமராஜா செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி: குற்றாலத்தில் கடைகளின் வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

A.M.Vikiramaraja Press Meet In Thoothukudi
A.M.Vikiramaraja Press Meet In Thoothukudi

By

Published : Sep 11, 2020, 11:24 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான மையங்களை திறப்பதற்கும் அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

அங்கு மூன்று மாத காலம்தான் சீசன். இப்போது அங்கு குளிப்பதற்கும், தங்குவதற்கும் அனுமதி அளிக்கவில்லை என்றால் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

குற்றாலத்தில் கடை வாடகை என்பது 456 விதியின்படி செயல்படுத்த வேண்டும். சில அலுவலர்கள் 70, 80 விழுக்காடு என தான்தோன்றித்தனமாக வாடகையை உயர்த்தி, வியாபாரிகளை பாதிக்கும் உள்நோக்கத்தோடு, அரசை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செயல்படுவதாக நாங்கள் அறிகிறோம்.

எனவே நியாயமான வாடகை விகிதத்தை செலுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதேபோல், பாளையங்கோட்டையில் 550க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை கரோனா தொற்று மையத்தில் அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் உள்ளே அனுமதிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்து வருகிறது.

குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கு நாங்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால், அதை காரணம் காண்பித்ததோடு இவர்களை காலி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக நாங்கள் அறிகிறோம்.

பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் உடனடியாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஏற்கெனவே எங்கள் வாழ்வுரிமை 6 மாத காலம் பறிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படும்.

மீண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டத்தை கையில் எடுக்கக் கூடிய நிலை வந்துவிடக்கூடாது என்பதை எச்சரிக்கை உணர்வுடன் பதிவு செய்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் அரசு விதித்த விதிகளின்படி திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து நிறுவனங்களையும் திறந்தால்தான் வாழ்வாதாரம் சிறக்கும்" என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details