தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தப்பியோடிய கொலை குற்றவாளிகள்: கீழே விழுந்ததில் கால் முறிவு ! - சேலத்தில் குற்றவாளிகள் தப்பி ஓட்டம்

சேலம்: கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை குற்றவாளிகள் தப்பி ஓடியதில் கீழே விழுந்தனர்
கொலை குற்றவாளிகள் தப்பி ஓட்டம்

By

Published : Jun 7, 2020, 11:34 AM IST

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கால் டாக்ஸி ஓட்டுநர் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள், காரில் செல்கின்றனர் என சேலம் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், சூரமங்கலம் உதவி ஆணையர் நாகராஜன் உள்ளிட்ட தனிப்படை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கார் ஒன்றை வழிமறித்து, அதில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்களுக்கு கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதும், அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து காரில் வந்த பெரம்பலூர் ஆடுதுறை விமல்ராஜ், மேட்டுப்பாளையம் குமார், சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பாலாஜி, கார்த்திகேயன் ஆகிய 4 பேரை சூரமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதில் விமல்ராஜ் என்பவர் கூலிப்படை தலைவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது 15 கொலை வழக்குகள் இருப்பதும், 8 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் சண்முகசுந்தரத்தை கடத்திவந்து, சேலம் மாவட்டம் சங்ககிரி மலைப்பகுதியில் கொலை செய்து எரித்துவிட்டு, அதற்கு பயன்படுத்திய காரை ஆந்திராவில் விற்பனை செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே சேலம் விடுதி மேலாளர் முருகனிடம் வழிப்பறி செய்த நகைகள், அவர்கள் பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவைகளை மீட்க விமல்ராஜ், குமார் ஆகியோரை , சேலம் டால்மியாபோர்டு பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு காவலர்கள் அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கு மண்ணில் அவர்கள் புதைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மீண்டும் அவர்களை காவல் துறையினர் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு அழைத்து வந்தனர்.

ஏற்கெனவே விபத்தில் சிக்கிய விமல்ராஜ் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே குமார் தப்பி ஓட முயன்ற போது, மேம்பாலத்தில் கால் இடறி கீழே விழுந்தார். அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் ஓட முயன்று தடுமாறி விழுந்த விமல்ராஜுக்கு கை முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெரம்பலூரைச் சேர்ந்த ஒருவரையும், பொள்ளாச்சியில் உள்ள ஹோட்டல் பெண் உரிமையாளரையும், பண்ருட்டியைச் சேர்ந்த நகை அடகு கடை வைத்திருக்கும் வயதான தம்பதியையும் கொலை செய்து கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்தக் கூலிப்படைக் கும்பலை முன்கூட்டியே கைது செய்ததால் மேலும் பல கொலை, கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details