பெங்களூர்:காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அண்மையில், அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், காவிரியின் உபரிநீரைப் பயன்படுத்த தமிழ்நாட்டை அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் (பிப்ரவரி 21) அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், காவிரிப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தென்மாவட்டங்கள் பயனடையும் வகையில், 14,440 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு எதிராக தங்களது கருத்துகளை மத்திய அரசிடம் எடுத்துவைப்போம் என நேற்று எடியூரப்பா பேசியுள்ளார். கர்நாடகா மாநில நீர்ப்பாசன அமைச்சர், இந்தத் திட்டம் தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் ஆளும் கட்சி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன.