டெல்லி:நெடுநாள் போராட்டம், கண்ணீர், ஏக்கம் என ஒரு பகுதி மக்களின் உரிமையை மீட்டெடுத்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. கிராமம் சூறையாடப்பட்டு, கிராமப்பெண்கள் சிதைக்கப்பட்டனர். சேதங்களை சரி செய்து வாழ்ந்து விடுவார்களோ என்று எண்ணி, வாழ்வதற்கு நினைக்கக்கூட கூடாது என்ற வகையில், உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய அனைத்தையும் நிறுத்தினர். வேலியே பயிரை மேய்ந்தது போல, இவை அனைத்து அப்பகுதி காவல் துறை, வனத்துறை, வருவாய்த்துறைகளால் நிகழ்த்தப்பட்டது.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில், சந்தன மரங்கல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்க சென்ற காவல்த்துறை வரம்பு மீறி அத்துமீறலில் ஈடுபட்டது. விசாரணைக்கு முன்பே குற்றத்தை நிரூபித்த காவல் துறை, அப்பகுதி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியது.
1992 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர் என காவல்த்துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை உள்ளடக்கிய 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொடங்கப்பட்ட விசாரணை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு தருமபுரி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.