தமிழ்நாடு

tamil nadu

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து - 40 பேரை மீட்கும் பணி தீவிரம்!

By ANI

Published : Nov 13, 2023, 11:19 AM IST

Uttarakhand tunnel accident: உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 40 நபர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uttarakhand tunnel accident
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து சம்பவம்

டேராடூன் (உத்தரகாண்ட்):நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், உத்தரகாண்ட மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதாவது, உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுங்சாலையில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை, நேற்று எதிர்பாராத விதமாக இடிந்து விபத்துக்குள்ளானது. மேலும், அந்த சுரங்கப்பாதை விபத்தில் முதற்கட்டமாக சுமார் 36 தொழிலாளர்கள் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் உள்ள மணல் மற்றும் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று, மீட்புப் பணி குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது.

மேலும், சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தவுடன், மாநில பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் மணிகாந்த் மிஸ்ரா, உடனடியாக ஆய்வாளர் ஐகதம்பா விஜல்வான் தலைமையிலான மீட்புக் குழுவினரைத் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

தற்போது இந்த மீட்புப் பணியானது 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையில் தற்போது வரை 15 மீட்டருக்கு மேல் கடந்துள்ளதாகவும், இன்னும் 35 மீட்டர் தூரத்தை அடைந்தால் தொழிலாளர்களை மீட்டு விடலாம் எனவும் கூறப்படுகிறது. நேற்று வரை சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்த நிலையில், தற்போது இடர்பாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது.

அதன் மூலம் சுரங்கப்பாதை விபத்தில் 40 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது வரை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள நபர்களுக்கு பைப் மூலமாக தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் நம்பப்படுகிறது.

இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கூறியதாவது, "இடிபாடுகள் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இடர்பாடுகளை அகற்றும்போது, அது மேலிருந்து கீழே விழுவதால் கொஞ்சம் சிரமாக உள்ளது. தற்போது சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள நபர்களிடம் தொடர்பில் உள்ளோம். இதுவரை சுமார் 15 மீட்டர் நகர்ந்துள்ளோம். இன்னும் 35 மீட்டர் செல்ல வேண்டும். விபத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

சுரங்கப்பாதையின் உள்ளே செல்ல பக்கவாட்டாக சென்று கொண்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என நம்புகிறோம். சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. இந்த மீட்புப் பணியானது தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் பூச்சு வேலைகள் முழுமையடையாததால் கூட சுரங்கப்பாதை இடிந்து விழுந்திருக்கலாம்" என தெரிவித்தனர்.

இதற்கிடையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது, "சுரங்கப்பாதையில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திரிபுராவில் அத்துமீறி நுழைந்த 14 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details