அல்மோரா: உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின் இன்றைய பரப்புரையின்போது நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், "அனைவருடன் பிணைப்பு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரது முயற்சி ஆகிய குறிக்கோள்களின் அடிப்படையிலேயே பாஜக அரசு செயல்படுகிறது" என்றார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் 'யாவரையும் பிரித்தல், கூட்டாகக் கொள்ளையடித்தல்' என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ளன என காங்கிரசை விமர்சித்தார் நரேந்திர மோடி. மேலும் அவர், "எந்தக் கட்சி (பாஜக) மக்களுக்கு வளர்ச்சிப் பணிகள், நலத்திட்டங்களைக் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டுகிறதோ அவர்களை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்.
உத்தரகாண்டில் ரூ.17,000 மதிப்பிலான திட்டங்கள்
உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின் மூலம், பாஜக மாபெரும் வெற்றிபெறும் எனத் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்க எங்களைவிட மக்கள் உறுதியுடன் இருக்கின்றனர். வாக்காளர்களின் நல்ல நோக்கம் ஒருபோதும் வீண்போகாது.
முந்தைய அரசு உத்தரகாண்ட் மாநில எல்லை கிராமங்கள், வட்டங்கள், மாவட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை. எல்லைப் பகுதியின் வளர்ச்சிக்கு பாஜக அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்த எல்லைப்புற கிராமங்களுக்காக நாங்கள் 'வைபிரண்ட் வில்லேஜ் (Vibrant Village)' என்ற திட்டத்தை வைத்துள்ளோம்.