தெலங்கானா பெடபள்ளி மாவட்டம் ஈசம்பேட்டா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அதே குடும்பத்தில் உள்ள மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற காவல் துறையினர், அங்கு மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மார்ச் 30ஆம் தேதி ஒரு தர்பூசணி பழத்தை வாங்கியதாகவும், அதனை பாதியாக வெட்டி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோரும், பாட்டியும் உண்டதும் தெரிய வந்தது.
மீதமிருந்த பழத்தை ஜன்னல் அருகே வைத்த நிலையில், அதை அவ்வழியாக சென்ற எலி கொஞ்சம் சுவைத்திருக்கிறது. இதையறியாத குடும்பத்தினர் மறுநாள் மீதமிருந்த பழத்தை பங்கிட்டு சாப்பிட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.