அகர்தலா :திரிபுராவில் ஜெகநாதர் ரத யாத்திரையின் போது உயர் மின் அழுத்த கம்பியில் ரதம் உரசி 6 பேர் உயிரிழந்த கோர விபத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி மாநில மின்சாரத் துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் உத்தரவிட்டு உள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
திரிபுரா மாநிலம் உனாகோடி மாவட்டம் குமார்காட் பகுதியில் ஜெகநாதர் ஆலய திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ரத யாத்திரையின் போது, ரதம் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் இந்த கோர விபத்தில் 22 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் உயிரிழப்பின் உண்மைத் தன்மையை வெளியிடாமல் போலீசார் மறைத்து வருவதாகவும் முதலில் கூறப்பட்டது.
காலை முதலே பலத்த மழை பெய்து வந்த நிலையில், உல்டோ ரத யாத்திரை நடைபெற்றதாகவும் இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். உல்டோ ரத யாத்திரையின் போது பக்தர்கள் தேர் இழுத்து முன்னோக்கி சென்ற நிலையில், உயர் மின்னழுத்த கம்பி மீது தேர் உரசியதில் இந்த கோர விபத்து அரங்கேறி உள்ளதாக போலீசார் கூறினர்.