தமிழ்நாடு

tamil nadu

குழந்தைகள் மருத்துவமனையில் ஆக்சிஜன் பைப்லைன்களை வெட்டிய திருடர்கள் - அதிர்ச்சி சம்பவம்

By

Published : Feb 6, 2023, 7:36 PM IST

ராஜஸ்தானில் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆக்சிஜன் பைப்லைன்களை திருடர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் பைப்லைன்கள் சரி செய்யப்பட்டதால், ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் உயிர் தப்பினர்.

Thieves
Thieves

அல்வர்: ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில் உள்ள கீதானந்த் அரசு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் நேற்றிரவு(பிப்.5) திருடர்கள் புகுந்தனர். அவர்கள் மின்சார வயர்கள், பைப்லைன்கள், மோட்டார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை திருட முயற்சித்ததாக தெரிகிறது.

அவர்கள் ஆக்சிஜன் சப்ளை பைப்லைன்களை வெட்டியதால், ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட ஆரம்பித்தது. செய்வதறியாமல் திகைத்த மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை சோதித்தனர்.

அப்போது மருத்துவமனையின் பின்புறமிருந்து திருடர்கள் தப்பியோடுவதை மருத்துவமனை காவலாளி பார்த்துள்ளார். அவர் உடனடியாக கூச்சல் போட்டதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து, இரு திருடர்களையும் பிடித்தனர். அவர்கள் பைப்லைன்களோடு, ஆக்சிஜன் சிலிண்டர்களையும் திருடியதாக தெரிகிறது.

பின்னர் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் அவர்களிடமிருந்து 10 சிலிண்டர்களை மீட்டனர். பின்னர் உடனடியாக பொறியாளர்களை வரவழைத்து ஆக்சிஜன் குழாய்களை சரிசெய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் உயிர் தப்பினர். இருந்தபோதும் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் திருடர்களை கைது செய்தனர்.

அரசு மருத்துவமனையில் தைரியமாக திருடர்கள் புகுந்ததாகவும், இதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை என்றும் மருத்துவமனை ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்தில் இரு திருடர்கள் கைதான நிலையில், அவர்களது கூட்டாளிகளையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்தூரில் 6 வயது சிறுவன் கடத்திக் கொலை - ரூ.4 கோடி பணம் கேட்டு மிரட்டியது யார்?

ABOUT THE AUTHOR

...view details