தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பார்க்கிங் பகுதியில் தூங்கிய குழந்தை... கார் மோதி பலியான சோகம்! - 2 வயது குழந்தை பலி

ஹைதராபாத்தில் பார்க்கிங் பகுதியில் கார் மோதிய விபத்தில், தரையில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car accident
கார் விபத்து

By

Published : May 25, 2023, 8:07 PM IST

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹயாத் நகரில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஹரி ராமகிருஷ்ணா. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி கலால்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் பயணித்த கார் மோதியதில் இரண்டு வயது பெண் குழந்தை இறந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி கவிதா. தம்பதியருக்கு 7 வயதில் மகனும், 2 வயதில் லட்சுமி என்ற மகளும் உள்ளனர். தங்கள் மாவட்டத்தில் வேலை கிடைக்காமல் ராஜூ தவித்து வந்துள்ளார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. 2 குழந்தைகளுடன் அன்றாட பிழைப்பு நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார் ராஜூ.

இதையடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹைதராபாத்துக்கு சென்று வேலை தேட முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் 4 பேரும் ஹைதராபாத்துக்கு வந்துள்ளனர். தம்பதியர் இருவருக்கும் கட்டுமான தொழில் செய்யும் வேலை கிடைத்துள்ளது. ஹயாத் நகர் பகுதியில் நடைபெற்ற கட்டுமான பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (மே 24) பிற்பகல் வெயில் சுட்டெரித்ததால் மகள் லட்சுமியை தூக்கிக் கொண்டு நிழல் இருக்கும் பகுதியை தேடியுள்ளார் கவிதா. அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் பகுதியில் சிறிது இடம் இருப்பதை பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த கவிதா, தரையில் துணியை விரித்து மகள் லட்சுமியை உறங்க வைத்துள்ளார். குழந்தை தூங்கியதும் கவிதா வேலைக்கு சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் தான் ராமகிருஷ்ணா, தனது மனைவியுடன் வீட்டுக்கு திரும்பினார். கார் பார்க்கிங் பகுதியில் குழந்தை படுத்திருப்பதை அவர் கவனிக்காததால் நொடிப் பொழுதில் குழந்தை மீது கார் ஏறி இறங்கியது. அப்போதும் ராமகிருஷ்ணாவுக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் அவர் கீழே இறங்கி வீட்டுக்கு செல்ல முயன்ற போது தான் தலையில் பலத்த காயத்துடன் குழந்தை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இதற்கிடையே, அங்கு வந்த கவிதா குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அலறினார். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமகிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்டிருந்ததால் அதை கவனிக்கவில்லை என ராமகிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஹைதராபாத் சித்ராபுரி காலனி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு கார் பார்க்கிங்கில் அண்மையில் 3 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் மோதியதில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. கார் பார்க்கிங் பகுதியில் விபத்துக்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் லாரி - மினி பஸ் மோதி விபத்து: 23 தமிழர்கள் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details