அமெரிக்கா: உலகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வான்நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இந்த துறையில் பெண்களால் சாதிக்க முடியுமா? அல்லது சாதிக்க வேண்டாம் நிலைத்து நிற்கத்தான் முடியுமா? ஆண்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களுக்கே தலைமை தாங்கும் வகையிலோ வளர்ந்துவிட முடியுமா? என்ற கேள்விகளுக்கேல்லாம். இதோ உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் ஒன்றை பதிலாக நான் இருக்கிறேன் என நிரூபித்துக்காட்டி இருக்கிறார் அபர்ணா சென்னபிரகதா.
தெலுங்கு வம்சாவளியை சேர்ந்த அபர்ணா சென்னபிரகதா இன்று சாதாரண பெண் அல்ல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர். இந்திய பெண் உலகின் பிரபலமான நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய தருணமாக இருக்கும் நிலையில் அவரின் சாதனை பயணம் எப்படி இருந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
தெலுங்கு வம்சாவளியில் பிறந்த அபர்ணா சென்னபிரகதா பெரும் வசதி வாய்ப்புகள் நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ஒன்றும் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் சிறு வயது முதலே படிப்பில் கெட்டிக்காரியாக இருந்துள்ளார். தனது பள்ளி பருவத்தை முடித்த அபர்ணா சென்னபிரகதா, சென்னை ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் அதற்கான தங்கள் முழு ஆதரவை வழங்கி அங்கு சேர்த்து படிக்க வைத்துள்ளனர். அங்கு கணினி அறிவியலில் பி.டெக். பின்னர், அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடியில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தனது வாழ்க்கை பயணத்தை இணையம் மற்றும் இணைய பாதுகாப்பு சேவைகளை வழங்கும் அமெரிக்காவை தலைமையாகக் கொண்டு இயங்கும் அகமாய் டெக்னாலஜிஸ் (Akamai Technologies) நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து, கணினி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) மற்றும் இன்க் டாட் (inc dot) உள்ளிட்ட நிறுவனங்களில் பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இணைந்த அபர்ணா சென்னபிரகதா, 12 வருடங்கள் அங்கு தனது வெற்றிகரமான பாதையை உருவாக்கியுள்ளார்.
யூடியூப், கூகுள் தேடல், கூகுள் நவ் மற்றும் கூகுள் லென்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணைய சேவை தளங்களை உருவாக்கும் மற்றும் மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். அது மட்டும் இன்றி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி பல கட்டங்களை படிப்படியாக தாண்டி வந்த இவர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது அவரின் உழைப்புக்கான அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அவர் வரும் நாட்களில், மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாஃப்ட் டிசைனர் ஆகியவற்றில் உருவாக்கப்படும் AI முயற்சிகளை வழிநடத்தவுள்ளார்.