தமிழ்நாடு

tamil nadu

தெலங்கானாவின் காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

By

Published : May 23, 2023, 1:52 PM IST

தெலங்கானாவின் கல்லணையான காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு, ’’அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ்’’ என்ற நிறுவனம் விருது வழங்கி கெளரவித்துள்ளது. இந்த விருதை தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் பெற்றுக் கொண்டார்.

Kaleshwaram Project
காலேஸ்வரம்

தெலங்கானா:தெலங்கானாவில் ஜெய்சங்கர் பூபல்லி மாவட்டத்தில், மெடிகட்டா என்ற இடத்தில், கோதாவரி நதியுடன் மூன்று துணை நதிகள் இணைகின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடத்தில்தான் கல்லணை காலேஸ்வரம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்திற்கு கடந்த 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மாநிலத்தின் 70 சதவீத பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கத்திலேயே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்பட்டது. சுமார் 80,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காலேஸ்வரம் அணை கட்டப்பட்டது. இதற்காக 1,832 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய்கள், குழாய்கள், சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. சுமார் 203 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட்டது.

இந்த நீர்ப்பாசனத் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தற்போது, ஆண்டுக்கு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப் பாசனமும், ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு குடிநீரும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் உலகின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம் என்று கருதப்படுகிறது.

காலேஸ்வரம் அணை அதன் அளவில் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. இதில், கோதாவரி நதியில் ’கிராவிட்டி கேணல்’ எனப்படும் கால்வாய்கள் மற்றும் டனல்கள் கட்டப்பட்டுள்ளன. இறைவை தொழில்நுட்பம் மூலம் கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மெடிகடா என்ற இடத்தில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீரை இறைத்து, போச்சம்மா சாகர் அணையில் சேர்க்கிறது.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த அணையை தெலங்கானா அரசு வெறும் மூன்று ஆண்டுகளிலேயே கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டது. இதுதான் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இந்த நீர்ப்பாசனத் திட்டம் விளங்குகிறது.

இந்த நிலையில், தெலுங்கானாவின் காலேஸ்வரம் திட்டத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் (ASCE) என்ற சர்வதேச நிறுவனம் காலேஸ்வரம் திட்டத்திற்கு "பொறியியல் முன்னேற்றத்தின் நீடித்த சின்னம்" என்ற விருதை வழங்கி கெளரவித்துள்ளது. அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 'அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2023-ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள மாநாட்டில், இந்த விருது வழங்கப்பட்டது.

நேற்று(மே.22) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். பின்னர், காலேஸ்வரம் மற்றும் மிஷன் பகீரதா திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தெலங்கானாவில் இந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் வந்த பிறகு பல அற்புதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விருது தெலங்கானா மாநிலத்திற்கும், முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிராவலராக மாறிய ராகுல்... லாரியில் பயணம்.. ஓட்டுநர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார்!

ABOUT THE AUTHOR

...view details