டெல்லி: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட சட்டம் இயற்றுபவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி அஷ்வினி உபாதயாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (நவ.9) விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்கும் வண்ணம், சிறப்பு அமர்வு மற்றும் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியது. சட்டம் இயற்றபவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக, அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் ஒரே மாதிரியான நெறிமுறைகளை வகுப்பது என்பது கடினமான செயல் ஆகும் என அமர்வு கூறியது.
அது மட்டுமல்லாமல், சட்டம் இயற்றுபவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் விசாரணையைத் தொடர்ந்து கண்காணிக்க தலைமை நீதிபதி அல்லது தலைமை நீதிபதியின் கீழான அமர்வின் கீழான சிறப்பு அமர்வு அமைக்கப்பட வேண்டும். எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் விசாரணை நிலையைக் கண்காணிக்க சிறப்பு கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிடலாம் எனவும் உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தி உள்ளது.