தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தமிழக அரசின் தடை அரசாணை செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! - plastic ban

TN Plastic ban: பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் என ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் என அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 1:48 PM IST

டெல்லி:பிளாஸ்டிக் பைகள், பேப்பர் கப் போன்ற பொருட்களில் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்க்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து மீண்டும் தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு – புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரனையின்போது, தமிழ்நாடு -புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை முடிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டு வரும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தை (EPR) பெற முடியாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாதிட்டனர்.

இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கொடிகள், ஹோட்டலில் உணவு கட்ட பயன்படும் தாள், பேக்கிங் டப்பாக்கள் உள்ளிட்டவை இன்றும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க:Gaganyaan: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் முதல்படி! சாதிக்குமா இஸ்ரோ?

இந்த முடிவால், பிளாஸ்டிக் தொழிலை நம்பி உள்ள ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே தவிர, தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறவில்லை என தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய வேண்டி கோரிக்கை விடுத்தனர்.

அல்லது 2020ஆம் ஆண்டு அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும், அதாவது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தைப் பெறும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (அக்.20) விசாரனைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்தது. மேலும், பேப்பர் கப் மீதான தடை தொடர்பான உத்தரவை மத்திய அரசின் நடைமுறை அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை - முதுகெலும்பில் மேற்கொண்ட சிகிச்சை என்ன?

ABOUT THE AUTHOR

...view details