பாட்னா: பீகார் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது நேற்று (ஆக. 21) தாக்குதல் நடந்துள்ளது. இதில், இரண்டு கார்களை பெரிய கற்களை கொண்டு உடைத்தும், கம்புகளை கொண்டு உடைத்தும் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம், காயா நகரின் சோகி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. காயா நகருக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் இன்று (ஆக. 22) வருகை தருவதை முன்னிட்டு, அவரின் பாதுகாப்புக்கு வாகனங்கள் அணி வகுப்பு செய்வது வழக்கம். அதன்படி, தலைநகர் பாட்னாவில் இருந்து காயா நோக்கி வந்த வாகனங்கள் மீது இந்த கல்லெறி தாக்குதல் நடந்துள்ளது.
அந்த அணிவகுப்பு வாகனத்தில் நிதீஷ் குமார் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக்கூறி 13 பேரை பீகார் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதை பாட்னா சிறப்பு காவல் கண்காணிப்பாளர் இன்று (ஆக. 22) உறுதி செய்தார்.