புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளித்து, ஐந்து நாள்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 விழுக்காடும், பழங்குடியினருக்கு 0.5 விழுக்காடு ஒதுக்கீடும் வழங்கி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று, புதுச்சேரி அரசு கடந்த 8ஆம் தேதி பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகள் அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக இடஒதுக்கீடு அறிவிப்பாணைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மனுதாரர், இதுசம்பந்தமான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற அனுமதி வழங்கப்படவில்லை என வாதிட்டார்.