தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2023, 12:40 PM IST

ETV Bharat / bharat

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் குற்றவாளியை விடுவிக்க அரசிடம் கோரிக்கை..

சிதியில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பிரவேஷ் சுக்லாவை விடுவிக்குமாறு பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் குற்றவாளியை விடுவிக்க அரசிடம் கோரிக்கை
பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் குற்றவாளியை விடுவிக்க அரசிடம் கோரிக்கை

போபால்:மத்திய பிரதேச சிதி மாவட்டத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தஷ்மத் ராவத் மீது கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் பிரவேஷ் சுக்லா படிக்கட்டின் கீழே அமர்ந்திருந்த இளைஞர் மீது மனிதாபிமானம் அற்ற செயலை புரிந்ததை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பிரவேஷ் சுக்லா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அந்த வீடியோ ஜூலை 4 செவ்வாய்க்கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா ஜூலை 5ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது தொடர்பான வழக்குகள் போடப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஜூலை 6ம் தேதி பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரிடம் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார். அதோடு, பாதிக்கப்பட்ட இளைஞரை நாற்காலியில் அமர வைத்து, அவரது பாதங்களைக் கழுவி பூஜை செய்து அந்த வீடியோவையும் வலைதளங்களில் பகிர்ந்தார். முதலமைச்சரின் இத்தகைய செயல் அரசியல் நகர்வுக்கான அடுத்த கட்டம் என அனைவரின் பொதுவான விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரான தஷ்மத் ராவத், சிறுநீர் கழித்த சம்பவத்தில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பிரவேஷ் சுக்லாவை விடுவிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன் பிரவேஷ் சுக்லா என்னிடம் தவறாக நடந்துகொண்டது உண்மை தான். இருப்பினும் தற்போது அவர் தனது தவறை உணர்ந்து விட்டார்.

எனவே அவரை மாநில அரசு மன்னித்து விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா தங்கள் கிராமத்தின் பண்டிட் என்றும் எனவே தாங்கள் அவரை விடுவிக்க அரசிடம் கோரிக்கை வைப்பதாகவும் கூறிய அவர், கிராமத்தில் சாலை அமைப்பதைத் தவிர, அரசாங்கத்திடம் கோருவதற்கு வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிறுநீர் கழித்தல் தொடர்பான விவகாரம் அரசியல் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.

இதையும் படிங்க:பர்னிச்சர் கடையில் டிவி வாங்குவது போல் நடித்து திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details