தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சித்தராமையா பதவியேற்பு விழா : 8 மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - டிகே சிவக்குமார்

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் நாளை பதவியேற்கவுள்ளனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின், அசோக் கெலாட், நிதிஷ்குமார் உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Siddaramaiah
சித்தராமையா

By

Published : May 19, 2023, 11:07 PM IST

கர்நாடகா:நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், நாளை(மே.20) பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்கவுள்ளனர். பெங்களூரில் உள்ள கந்தீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இவர்களைத் தவிர, பதவியேற்பு விழாவில் பங்கேற்க, எட்டு மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர்சிங், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு Z+ மற்றும் Z பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் மைதானத்தில், 12 காவல்துறை துணை ஆணையர்கள், 206 காவலர்கள், 11 ரிசர்வ் காவல்படை ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியைக் காண மைசூர், மாண்டியா, ராமநகர், வட கர்நாடகா, கோலார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மைதானத்தைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமாக சுமார் 1,500 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மைதானத்தின் இரண்டு வாயில்களில் விவிஐபிகளின் வாகனங்கள் தனித்தனியாக உள்ளே நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தை இணைக்கும் சாலைகளில் சுமார் 500 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்த பதவியேற்பு விழாவை தனது பலத்தை நிரூபிக்கும் மேடையாக மாற்ற காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய பாஜக அரசுக்கு எதிரான மாநில தலைவர்களை ஒன்றிணைத்து, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காண்பிக்கவும் முயற்சித்து வருகிறது. இதனால், இந்த பதவியேற்பு விழா நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனிடையே சித்தராமையாவின் பதவியேற்பு விழாவில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகிவுள்ளது. அவர் சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ககோலி தஸ்திதார் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சித்தராமையா எனும் நான்: சோசலிச ஈர்ப்பு தொடங்கி... 2வது முறை முதலமைச்சர் வரை கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details