தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிருஷ்ண ஜென்மபூமி நில விவகாரம்: ஷாஹி இத்கா மசூதியை ஆய்வு செய்யலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ண ஜென்மபூமி நில விவகாரத்தில் ஷாஹி இத்கா மசூதியை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 5:25 PM IST

Etv Bharat
Etv Bharat

டெல்லி : உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் உள்ளது. அங்கு இருந்த காத்ர கேசவ் தேவ் கோயில் இடிக்கப்பட்டு ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டு உள்ளதாகவும், இந்த இடத்தில் கிருஷ்ணர் பிறந்ததால் அந்த இடத்தில் சர்வே செய்யவும், இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரியும் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஷாஹி ஈத்கா மசூதியில் சர்வே எடுக்க உத்தரவிட்டனர்.

மேலும், சர்வே நடைமுறைகள் குறித்து டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணையில் ஆலோசிக்கப்படும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். அதேநேரம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாட்டி அமர்வு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், மசூதி தரப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால், சட்டப்படி மனுத் தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்து அமைப்பு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆணையத்தால் சர்வே நடத்தக் கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதித்து உள்ளதாகவும், சர்வே நடைமுறைகள் குறித்து டிசம்பர் 18ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியதாகவும் கூறப்பட்டது.

மேலும், ஷாஹி ஈத்கா மசூதியின் வாதங்களை நீதிமன்றம் நிராகரித்து உள்ளதாகவும், மசூதியில் இந்து கோயிலின் பல அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அங்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க :ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் பஜன் லால் சர்மா!

ABOUT THE AUTHOR

...view details