ஹைதராபாத்: சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், எலியும் பூனையுமாக இருந்த வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஈரான் தங்கள் நீண்டகால விரோதத்தை கைவிட்டு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன.
அதில் இரு நாடுகளுக்கான அரசியல் பகிர்வு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. சவூதி ஆதரவுடைய அரசாங்கத்திற்கு எதிராக ஏமன் ஹவுதி மக்கள் மத்தியில் கிளர்ச்சியைத் தூண்டி வந்த ஈரான், இப்போது மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் சமரசத்தால் லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலும் மோதல்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த சமரச கொள்கை ஒரே நாள் இரவில் நடந்தது என்றால் இல்லை என்று கூறலாம். இதன் பின்னால் சீனாவின் பின்புலமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் தனது நிலைப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்ளவும், அங்கு அமெரிக்காவின் செல்வாக்கைச் சரிக்கவும் இந்த திட்டத்தின் மூலம் சீனா காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு டிரம்ப் அரசாங்கம் மவுனம் காத்த நிலையில், பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை உறுதி செய்யச் சீனா பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டது.
சவூதிக்கு எதிரான டிரம்ப்பின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய பைடன், அதை தன் தேர்தல் பிரச்சார கருவிகளில் ஒன்றாகப் பயன்படுத்தி வெற்றியும் கண்டு உள்ளார். அதற்கு ஏற்றார் போல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு ஒரே இரவில் காலி செய்து தாலிபான்களிடம் நாட்டை விட்டுச் சென்றது, பிராந்தியத்தில் சவுதியின் நிலைப்பாடு ஆணி வேர் கொண்டு நிற்கச் செய்தது.
அதேநேரம் உக்ரைன் ரஷ்யாவின் போரால் தன் நிலைப்பாட்டை பைடன் அரசு கைவிட வேண்டி இருந்தது. மறுபுறம் இந்த போரின் விளைவால் பைடன் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் பல்வேறு தரப்பிலான விமர்சனங்களை எதிர்கொள்ள ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் சவுதி அரசாங்கத்தை வற்புறுத்தும் முயற்சியில் பைடன் ஈடுபட்டார்.
ரஷ்யா - உக்ரைன் போரின் விளைவாக எரிசக்தித் துறையில் ஏற்பட்ட அபரிவித மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மேற்கு ஆசியாவின் பக்கம் அமெரிக்கா திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், சீனாவின் நட்பு நாடான ரஷ்யா, அமெரிக்காவின் முயற்சிகளைத் தடுக்க ஏற்கனவே பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்திருந்தது.
மறுபுறம் ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் செய்து எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து எண்ணெய் விலை உயர்வைத் தக்கவைக்க ஒப்புக் கொண்டன. ஒபேக் குழுவின் ஒன்றிணைக்கும் புள்ளியாக ரஷ்யா இருப்பதாலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கு இடையே நிலவும் நீண்ட கால பிரச்சினைகள் காரணமாகவும் இந்த முறையும் அமெரிக்காவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தின.
இதில் ஏற்பட்ட நட்புறவின் காரணமாக நீண்ட தூர ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ட்ரோன்களை, உக்ரைன் போரில் பயன்படுத்த ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கியது. சவூதி அரேபியா அதிக விலையைப் பராமரிக்கக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைவாக வைத்திருப்பது, ரஷ்யாவின் எரிசக்தித் துறையை மேலும் ஊக்கப்படுத்த முயல்வதாகக் கூறப்படுகிறது.